ஜவுளி தொழிலில் இந்தியாவை உலக மையமாக மாற்ற பிரதமர் உறுதி: இணை அமைச்சர் தர்ஷனா
குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை அமைச்சர் தர்ஷனா வி. ஜர்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் முதல் முறையாக நடைபெறும் ஆசிய ஜவுளி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய மத்திய ஜவுளி, ரயில்வே துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஷ், ஜவுளி தொழிலில் உள்ள சவால்கள், பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க நாட்டில் ஜவுளி துறையின் சங்கிலியை சார்ந்தோர் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பல ஆண்டுகளாகவே ஆசியா ஜவுளி சந்தையில் முன்னணி வகிப்பதாகவும் கூறினார்.
Advertisment
இந்தியா, சீனா, வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உலக அளவில் ஜவுளி தொழிலில் ஆசியா முன்னணியாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார்.
மேலும், உலக அளவில் இந்தியா ஜவுளி உதிரிபாகங்கள் உற்பத்தியில் 2-வது இடம். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ஜவுளி தொழிலில் உலக மையமாக இந்தியாவை மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார்.
ஆடை நமது கலாச்சாரத்துடன் இணைந்தது மட்டுமின்றி பல ஆண்டுகள் ஆய்வின் மூலம் நமது நாட்டின் ஜவுளி உற்பத்தி தரம், நிரந்தரம், நிலையான சந்தையை அடைவதற்கு ஏற்றதாக மாற்றியுள்ளது. ஜவுளி தொழில் நாட்டில் 8% வணிக ரீதியான ஏற்றுமதி பங்கு மட்டுமின்றி 10 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்குகிறது என்றார்.
இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாடு கோவையில் இரு நாட்கள் நடைபெறுகிறது. "ஆசியா 2015க்கு பிறகு ஜவுளி உற்பத்தி, நுகர்வோருக்கான உலகளாவிய மையம்" என்ற தலைப்பில் மாநாடு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“