School Education Minister Anbil Mahesh Press Meet, 12th Public Exam : கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வழியே பாடஙகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையின் தீவிரம், சற்று தணிந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் அப்போது தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கியது.
மார்ச் மாத தொடக்கம் முதல் பன்னிரெண்டாம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா சூழலால் தேதி குறிப்பிடாமல் எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாத தொடக்கத்தில் நிறைவடையும். கொரோனா சூழலை காரணம் காட்டி பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மே மாதம் வந்தும் நடத்தப்படாததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்வுகள் நடத்தப்படாததால், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் எழுந்துள்ளதாக பெற்றோர்களும் ஆசிரியரகளும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பாக, முக்கிய முடிவுகளை எட்டுவதற்காக கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, `தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது சுமார் 27000-ஐ நெருங்கி உள்ளது. இந்த சூழலில் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறைகளில் பல்வேறு பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு விரைவில், அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil