நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த சுஜாதா மகள் கலையரசி (14) 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை மாலை சுஜாதா, கலையரசி, கலையரசியின் மாமா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று ஷவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இறந்த சிறுமியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக டி.எஸ்.பி தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் ஷவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் ஷவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10 மணிக்கு ஷவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் உணவகத்தில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் ஷவர்மா தயாரிக்க தடைவிதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.