பொன்னமராவதி கலவரம் : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று இரவு வெடித்த கலவரம் காரணமாக அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஃபேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபேஸ்புக்கில் இழிவாக பேசி பதிவிட்டுவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தார்.
இருந்த போதும் சில நபர்கள் திடீரென்று கடை வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அவர்கள், காவல் நிலையத்திற்குள் கற்களை வீசியதோடு, போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீஸார் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, வானத்தை நோக்கி போலீஸார் இரு முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து அடிதடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். பொன்னமராவதி சிறிது நேரத்தில் கலவர பூமியானது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால், ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை எஸ்பி.செல்வராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பொன்னமராவதி பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.இந்நிலையில் அசாம்பவிதங்கள் ஏதும் ஏற்படமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமாரவதியில் இன்று 144 தடை உத்தரவை கோட்டாச்சியார் பிறப்பித்துள்ளார்.