நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 25) 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. கேகே நகர், போரூர், மாங்காடு, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அசோக்நகர் , வேளச்சேரி, நங்கநல்லூர், ஆலந்தூர், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசியில் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளரிகுண்டு மற்றும் 1 தாலுக்காவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“