வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. பிரபுவின் மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்து இந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, பொதுத் தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றார்.
இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மகள் விஷ்ணு பிரியா மன நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஜுன் 4) தாய், தந்தை வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடு கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் மதுப் பழக்கத்தை கைவிடக்கோரி மகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பா.ம.க தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் சிறுமி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“