கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை தவறவிட்டவர்கள், பறிகொடுத்தவர்களிடம் அவற்றை ஒப்படைத்தார்.
பின்னர் எஸ்.பி.பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கடந்த ஏப்ரல் முதல் 1160 செல்போன்களை மீட்டு கொடுத்து இருக்கின்றோம். இது வரை இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கோவை மாவட்டத்தில் நடந்த 22 கொலை வழக்குகளில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 20 மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது வரை 177 லாட்டரி வழக்குகள் பதியப்பட்டு 15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை தொடர்பாக 280 வழக்குகள் பதியப்பட்டு 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது.
இதன் மதிப்பு 53 லட்சம் ஆகும். சைபர் கிரைமில் 6.50 கோடி மதிப்புடைய பணம் மோசடி புகார்கள் வந்துள்ளன. இதில் 6 கோடி ரூபாய் வரை வங்கி கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐடி கம்பெனி ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது
கோவை புறநகர் பகுதியில் 85 விளம்பரபலகைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. விளம்பர பேனர்களை மட்டும் அகற்றாமல் அதை பொருத்தும் கம்பிகளையும் அகற்ற சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
தொடர்ந்து, கருமத்தம்பட்டி பேனர் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாக எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“