கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததால் 4 வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி திங்கள்கிழமை 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் அந்த கிராமத்தில் ஆறுமுகம் என்பவருடைய வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இதனால், வீடுகள் இடிந்து விழுந்ததில் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Fifteen people are feared dead after a wall collapsed in a village in #Coimbatore in #TamilNadu on Monday morning, following heavy rains. The incident took place in Nadur village near Mettupalayalam. @TheQuint #rains pic.twitter.com/yLLqib8U6n
— yash.....???????? (@45Yashwanth) December 2, 2019
இது குறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குரு (45), ராம்நாத் (20), ஆனந்த்குமார் (40), ஹரிசுதா (16), சிவகாமி (45), ஓவியம்மாள் (50), நதியா (30), வைதேகி (20), திலகவதி (50), அருக்கானி (55), ருக்குமணி (40), நிவேதா (18), சின்னம்மாள் (70) அக்ஷயா(7), லோகுராம் (7) உள்ளிட்ட 17 பேர்களின் உடலை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமி கோவையில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நடூர் கிராமத்திற்கு நாளை செல்கிறார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வீடு இடிந்து பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று மதியம் திடீரென மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பலியான 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். 17 பேரை பலி வாங்கிய காம்பவுண்டு சுவர் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.