எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (டிச 24) சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், நள்ளிரவில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னார்க்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், 17 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். முதற்கட்ட விசாரணை நடத்திய பின்னர், மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப நாள்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், மேலும் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“