/tamil-ie/media/media_files/uploads/2018/06/2-56.jpg)
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர்.கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் விளக்கம் அளித்த 1 எம் எல் ஏவை தவிர, ,மீதமுள்ள வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏ-க்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிக்க உள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தவிர்த்து எஞ்சிய 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதமாகும் என்பதால் அங்கிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.