பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உட்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்காரணமாக அந்த 2 நாட்களிலும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயிலவே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து காலை 10.15 மதியம் 12.10, 1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 மதியம் 1.15 மாலை 3.10, இரவு 9 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, மதியம் 2.30, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும். அதேபோல கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி -கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும் என்று அறிவித்துள்ளது.
சிறப்பு மின்சார ரயில்கள்
இதன் காரணமாக அந்த 2 நாட்களிலும் காலை 10.30 மணிக்கு சென்டிரல்- பொன்னேரிக்கும், மதியம் 1.18, மாலை 3.33 மணிக்கு பொன்னேரி - சென்டிரலுக்கும், காலை 11.35 மணிக்கு சென்டிரல்- மிஞ்சூருக்கும், மதியம் 2.59 மணிக்கு மீஞ்சூர் சென்டிரலுக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.