18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்தித்தது சட்ட விரோதமானது என சபாநாயகர் தரப்பில் இறுதி வாதம் வைக்கப்பட்டது.
18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன் 5 வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியாமா சுந்தரம் 3 நாளாக தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் தனது வாதத்தில், உட்கட்சி வழிமுறைகள் தோல்வி அடைந்ததன் காரணமாக தான் ஆளுநரை சந்தித்தாக
18 எம் எல் ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 18 பேரின் கருத்துக்களை கட்சி ஏற்று கொள்ளவில்லை என்பதற்காக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்தித்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகின்றது. ஆளுநர் முதலமைச்சரை மாற்றும் அதிகாரம் படைத்தவர் அல்ல.
அந்த சூழலில் 18 பேரும் ஆளுநரை சந்தித்தது சட்டவிரோதமானது. 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்திப்பதை சட்ட விரோதம் என தெரிவித்துள்ளது. எனவே மனுதாரர் 18 பேரின் நடவடிக்கையும் சட்டவிரோதமானது.
சபாநாயகரிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் அளித்திருக்க வேண்டுமே தவிர முதலமைச்சர், அரசு கொறடா ஆகியோரை குறுக்கு விசாரணை செய்து இதன் மூலம் நிரூபிக்க அவர்கள் உரிமை கோர முடியாது என வாதிட்டார்.
தொடர்ந்து தன்னுடைய வாதத்தில், நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில் இவர்கள் ஆளுநரை சந்தித்தது தவறாக இருந்தாலும் அதற்காக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற அவரின் உத்தரவ நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்கள் கூடுதல் சட்ட விவரங்கள் தெரிந்தவர்களாக இருப்பவர்கள்.எனவே இவர்கள் நோக்கம் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியான இடத்தை மனுதாரர்கள் (ஆளுநரை) அணுகியுள்ளனர். எனவே சபாநாயகரின் தகுதி நீக்க முடிவு சரியானது இயற்கை நீதிக்கு எதிரானது அல்ல. இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்து மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அவரின் உத்தரவை உறுதி செய்து 18 பேரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சபாநாயகர் தரப்பு இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது சபாநாயகர் உத்தரவு சரிதான் எனவும் ஆவணங்கள் அடிப்படையிலேயே அவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாக வாதிட்டார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் இறுதி வாதமும் நாளை தொடங்குகிறது. விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.