நேபாளத்திற்கு யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர், மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் கைலயாய யாத்திரைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் சென்று வருவது வழக்கம். இந்தாண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தில் மோசமான வானிலை காணப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பர்சா, சிந்துலி, கைல்கலி, போன்ற இடங்களில் கன மழையும் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் யாத்திரை சென்ற மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இந்த யாத்திரைக்கு சென்னையை சேர்ந்த 23, தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த 20ஆம் தேதி சென்றிருந்தனர்.
யாத்திரை முடித்துவிட்டு தற்போது வரை அவர்கள் வீடு திரும்பவில்லை. முதலில் அவர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் உள்ள சிமிகோட் என்ற இடத்தில் அவர்கள் தங்கினர். பின்பு, அங்கிருந்து 30ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 4 பேர் மட்டுமே ஊர் திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 19 பேர் கடந்த 5 நாட்களாக சிமிகோட் பகுதியிலேயே தங்கி வருகின்றனர். . இத்தகைய மோசமான வானிலையில் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மட்டுமே இந்த பகுதிக்கு வந்து செல்லும் என்பதால், மத்திய மாநில அரசுகள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.