தமிழக காவல் துறையில் 1993-ம் ஆண்டு காவல்துறை பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேர் கோவை (பி.ஆர்.எஸ்) காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு பயிற்சி முடித்த அவர்கள் தற்போது தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், டி.எஸ்.பி என காவல்துறை உயர் பொறுப்பில் எனப் பல்வேறு பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தங்கள் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அனைவரும் மீண்டும் சந்திக்க திட்டமிட்டனர்.

அதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 300 போலீசார் உப்பிலிபாளையம் காவல்துறை சமுதாயக் கூடத்தில் இன்று சந்தித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவரும் பச்சை நிற சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தனர். காவல்துறை நண்பர்கள் தங்கள் பயிற்சி பெற்ற காலத்தை நினைவு கூர்ந்தும் ஒன்றாக விருந்து உபசரித்தும் கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து 1993-ம் ஆண்டு தங்களுக்கு பயிற்சி அளித்த போலீஸ் அதிகாரிகளை இந்நாள் போலீசார்கள் கௌரவித்தனர். அதிகாரிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை