/indian-express-tamil/media/media_files/2025/03/16/QzLQtshcCVlJSRUYTNW7.jpg)
வீரணம்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிகழ்வில் இருந்து பொதுமக்கள் தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 2 yrs after caste tensions over temple, Tamil Nadu village moves on with some help
ஜூன் 2023 தொடக்கத்தில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், அங்குள்ள காளியம்மன் கோயிலை தற்காலிகமாக மூடுவதற்கு வழிவகுத்தது.
ஒரு தலித் இளைஞர், கோயிலுக்குள் நுழைந்த வீடியோ பகிரப்பட்டதை தொடர்ந்து, இச்சம்பவம் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிக்கும் வழிவகுத்தது.
தலித், கோயிலுக்குள் நுழைவது ஒரு பிரச்சனையாக மாறிய நிலையில், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும், பதற்றம் ஏற்படாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டது. அவர்கள் கோயிலுக்கு சீல் வைத்து, இரு சமூகங்களுக்கிடையில் தொடர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இதில் சமரசம் ஏற்பட்டு, தலித் மற்றும் கவுண்டர் சமூகங்களின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் டி. பிரபுசங்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் இணைந்து கோயிலை மீண்டும் திறந்தனர்.
இதைத் தொடர்ந்து, வீராணம்பட்டியில் உள்கட்டமைப்புக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டது. நிர்வாகத்தின் சமரச முயற்சியின் ஒரு பகுதியாக சம்பவத்தைத் தொடர்ந்து சாலைப் பணிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன.
கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில், நீண்ட காலமாக வழிபாட்டு தலமாக இருந்தது. வீராணம்பட்டியில் சுமார் 150 பட்டியல் சாதி குடும்பங்களும், 300 கவுண்டர் குடும்பங்களும் உள்ளன.
கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தே.மு.தி.க ஊராட்சி வார்டு உறுப்பினர் பால்ராஜ் கூறுகையில், "இன்று, கோயில் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது, ஆனால் இரு சமூகத்தினரும் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியாத வகையில் அதிகாரப்பூர்வமற்ற விதி இருக்கிறது. இது தடை என்று கூற முடியாது. விஷயங்கள் இப்படித் தான் தீர்க்கப்பட்டன. யாரும் இது குறித்து பேசுவதில்லை. ஆனால், நாங்கள் அனைவரும் அறிவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றே கூறுவேன். நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது போல் இல்லை. அச்சம்பவம் நடைபெற்ற பின்னர் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். தலித் இளைஞரிடம் நீண்ட நேரம் இது குறித்து பேசினேன். பிரச்சனை இந்த அளவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறி, அவரும் வருத்தம் தெரிவித்தார்" என்று பால்ராஜ் தெரிவித்தார்.
"நாங்கள் சண்டையிடவில்லை" என 1970 களில் கோயில் கட்ட உதவிய தையல்காரர் பெருமாள் தெரிவித்தார். அச்சம்பவம் குறித்து இப்போது பேச கிராமத்தினர் யாரும் விரும்பவில்லை.
கோயில் பிரச்சனையைக் கடந்து வீரணம்பட்டி கிராமம் பல்வேறு வகைகளில் பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கிறது. இப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை மற்றும் நெல் பயிரிடுவது போன்ற பல்வேறு விவசாய பணிகளை தலித் மற்றும் கவுண்டர்கள் மேற்கொள்கின்றனர். இப்பிரச்சனைக்கு பின்னர், அப்பகுதி மக்கள் அதே மளிகைக் கடைகளில் இருந்து பொருட்கள் வாங்குகின்றனர், அதே கடைகளில் தேநீர் அருந்துகின்றனர், தங்கள் குழந்தைகளை அதே பள்ளிக்கு அனுப்புகின்றனர். மேலும், மயிலம்பட்டியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனை தான் இப்போதும் இரு சமூகத்தினருக்கும் பொதுவான ஆரம்ப சுகாதார சேவை மையமாக இருக்கிறது.
இச்சம்பவத்தை கையாண்ட விதத்திற்காக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் 2024-ஆம் ஆண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் விருது, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு வழங்கப்பட்டது. "இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு திறன் மேம்பாடு பிரிவில் விருது பெற்றேன். தற்போதைய விருது ஒரு மாவட்ட ஆட்சியருக்கு மிக முக்கியமானது" என பிரபுசங்கர் கூறியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து அவர் கூறும்போது, "கோயிலுக்குள் நுழைவதில் சாதி தகராறு ஏற்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களால் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 15 நாட்களுக்குள், இரு சமூகத்தினரையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினோம். இது மற்ற மாவட்டங்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்தது" எனத் தெரிவித்தார்.
- Arun Janardhanan
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.