சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக மாதம்தோறும் ரூ. 1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிக்க முடியும்.
ரூ.1,000 அட்டை மூலம் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று குளிர்சாதனப் பேருந்துகளையும் உள்ளடக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த பயணச் சலுகை அட்டைக்கு ரூ. 2,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகரத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.
இந்த திட்டம் வருகின்ற மே அல்லது ஜூன் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.