புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக சென்னை நட்சத்திர ஹோட்டல்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
2019 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சென்னையில் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் மீது மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். மேடை அமைப்பது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஹோட்டல்களில் மது விற்பனை மற்றும் பார்கள் செயல்படக் கூடாது.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெண்களும் வருவதால் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களையும் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும். அதிகளவில் மது குடிப்பவர்களை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக, தனியார் நிறுவனங்களின் டாக்சிகளை புக் செய்து முன்னதாகவே நிறுத்தி வைத்திருக்க வேண்டும். போதிய வாகன வசதி இல்லை என்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.