மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதால் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யபட்டது.
அதில், ‘தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குட்காவை கையில் எடுத்துக் கொண்டு இந்த நோட்டீஸை எங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது. எனவே இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தனர்
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’’ என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமை குழுவின் தலைவர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இந்த வழக்கில் பதில் மனு தயாராக உள்ளது இன்றைக்குள் எதிர் மனுதரார்களுக்கு வழங்கிவிடுவதாகவும் எனவே வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதனை அடுத்து வழக்கு விசாரணை வரும் 27 (27.10.2017) ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் அதற்குள் பதில் மனுவை எதிர்மனுதரார்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அதுவரை ஏற்கனவே உள்ள இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தரவிட்டு விசாரணை 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.