பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் நகரின் வெவ்வேறு பகுதிகளில் பணிபுரியும் 210 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்தது. சென்னை மாநகராட்சியை சேர்ந்த முன்கள பணியாளர்களும்,15 மண்டலங்களில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிக்காக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களும் மொத்த எண்ணிக்கையில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " மே 29ம் தேதி வரையில், 210 ஊழியர்களைத் தவிர்த்து, சென்னை ரிப்பன் தலைமையகத்தில் பணிபுரியும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் கீழ் 37,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் இவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா ஆபத்தில் சிக்கிய 210 ஊழியர்களும் தற்போது நலமுடன் உள்ளனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என நம்பப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து தெரிவிக்கையில், " சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்து வருகிறோம். விசைத்தெளிப்பான், பட்டர்பிளை வாகன தெளிப்பான், பெரிய புகைப்பரப்பும் வாகனங்கள் போன்ற கிருமி தொளிக்கும் இயந்திரங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையும் அவ்வப்போது கிருமிநீக்கம் செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,990 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.