சென்னை காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின்
மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற 8 மாதம் நிறைந்த கர்ப்பிணி லதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். கோபம் அடைந்த பொதுமக்கள், கடற்படை வாகனத்தை சேதப்படுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற, அப்பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய தம்பதி திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil