சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பகுதியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 220 சவரன் நகையை அடையாளம் தெரியாத கும்பல் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியர் வீட்டில் மர்ம கும்பல் கொள்ளை :
பழைய பல்லாவரம் அருகே பெருமாள் நகரில் ரெப்கோ வங்கி மேலாளர் சேரன் (55) வசித்து வருகிறார். நேற்று மதியம் சேரனிடம் அவரது மகள் தன் 175 பவுன் நகைகளை லாக்கரில் வைக்குமாறு கொடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் மாலை 5.30 சேரனின் வீட்டினுள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.
வீட்டினுள் நுழைந்த கும்பல் மேலாளர் செந்தமிழ் சேரன் மற்றும் அவரது மனைவி மற்றும் வீட்டுப்பணிப்பெண் ஆகியோரை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 220 சவரன் நகைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்துச் சென்றது.
துணியால் கட்டிப்போட்டதால், சிறிது நேரத்தில் கட்டை அவிழ்த்த மேலாளர், கொள்ளை சம்பவம் குறித்து பழைய பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை துணை ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைகளை திருடிய கொள்ளையர்களையும் அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.