COVID-19 Deaths in Chennai:சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த 236 பேரின் பெயர்கள் பலியானோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்த 20 பேரின் விவரங்கள் இறந்தோர் பட்டியலில் இடம் பெறாதது அண்மையில் தெரியவந்தது. இது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் கொரோனா இறப்பு பட்டியலை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
Advertisment
செவ்வாயன்று மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற டிபிஹெச் அதிகாரிகள் குழு, சுகாதார அதிகாரிகளால் பராமரிக்கப்படும் இறப்பு பதிவேட்டில், சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் பட்டியலை விட 236 மரணங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு சதவீதம் 1 % குறைவாகவே இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்த நிலையில், தற்போது அது 0.7%ல் இருந்து 1.5%ஆக உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட 20 கோவிட் -19 இறப்புகள், சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் பட்டியலில் தெரிவிக்கப்படவில்லை என்று TOI தெரிவித்துள்ளது.
"எந்தவொரு மரணத்தையும் மறைப்பது எங்கள் நோக்கமில்லை. நாங்கள் வெளிப்படையாக செயல்படுகிறோம்" என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் TOI இடம் கூறினார்.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகள் இறப்புக்களை மின்னஞ்சல் மூலம் மாநில மற்றும் நகர கார்ப்பரேஷனுக்கு அனுப்ப வேண்டும். "பலர் அதை சமர்ப்பிக்கவில்லை, அதற்கான காரணத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சரிபார்ப்புக்குப் பிறகு பாதிப்புகளை இறப்பு பதிவேட்டில் சேர்ப்போம்" என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார். "ஒரு வாரத்திற்குள் பிரச்சனையை சரிசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
அனைத்து கோவிட் -19 இறப்பு அறிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மாநில சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்ப சென்னை மாநகராட்சி ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து உள்நாட்டு இறப்புகளையும் பகுப்பாய்வு செய்து, அவற்றை "சாத்தியமான கோவிட் -19" என்று விவரிக்க முடியுமா என்று ஆராய பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வினாயகம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷுக்கு எழுதிய கடிதத்தில், டாக்டர் பி.வடிவேலனின் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு, சென்னை மாநகராட்சி கோவிட் -19 இறந்தவர்களின் விவரங்களை ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு பக்க கடிதத்தில், அனைத்து கோவிட் -19 இறப்பு அறிக்கைகளை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின்படி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "மார்ச் 2020 முதல் அனைத்து கோவிட் -19 இறப்புகளும் பகிரப்பட வேண்டும். இனிமேல் சென்னை கார்ப்பரேஷனின் அனைத்து இறப்புகள் குறித்த அறிக்கை, நியமிக்கப்பட்ட அதிகாரிகள் - நகர சுகாதார அதிகாரி அல்லது சுகாதார அலுவலர் மூலம் தினமும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்" என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“