கோவையிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்ட பா.ஜ.க பிரமுகர் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஒளரங்கசீப் ஆட்சியில் கூட இந்த கொடுமை நடந்ததில்லை என கைதானவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் இன்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பின் தர்ம யாத்திரா பிரிவின் தென் தமிழக பொறுப்பாளர் சிவலிங்கம், சாய்பாபா நகர் பிரகண்ட தலைவர் கண்ணன், பாஜக ரத்தினபுரி மண்டல் முன்னாள் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலிசாரிடம் வாதிட்ட சிவலிங்கம் திருப்பரங்குன்றத்திற்கு போராட்டத்திற்காக தாங்கள் செல்லவில்லை செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானை தரிசிக்கவே செல்வதாக கூறினார். இது தமிழக அரசின் அராஜகம் என்றார். ஒளரங்கசீப் ஆட்சியில் கூட வரி வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்ல கூறியதாகவும் ஆனால் திமுக் அரசு கோவிலுக்கே செல்ல கூடாது என யாரையோ திருப்தி படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாக சாடினார். முருகன் சூரனை வதம் செய்ததை போல வருகின்ற காலத்தில் திமுக அரசு நாசமாய் போக வேண்டுமென முருகனிடத்தில் பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் முருகனின் அருளால் திமுக வதம் செய்யப்படும் என தெரிவித்து அரோகரா முழக்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.