திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலையப் பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் அனைத்திலும் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப அனைத்தும் நவீனப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, "ஸ்மார்ட் காவலர்" செல்போன் செயலி (Smart Kavalar App) மூலம் மின்னணு ரோந்து பணி (E-Beat) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரோந்து பணிகள் மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கும், ரோந்து மற்றும் களக்காவல் பணிகளை மிகவும் திறம்படச் செய்வதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன், மின்னணு ரோந்து பணிகளை அமல்படுத்துவதற்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு 30 கையடக்க கணினிகள் (Tablets) வழங்கப்பட்டது.
2023-2024 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் நிலைய விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு விசாரணையின்போது வழக்கின் விவரங்களை பதிவு செய்யவும், ஆடியோ, வீடியோ பதிவு செய்யவும், குற்றவாளிகளின் புகைப்படங்கள், அறிக்கைகள், வழக்கு தொடர்பான கோப்புகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யவும், விசாரணை அதிகாரிகளுக்கு டேப்லட் (Tablets) கருவிகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், தமிழக காவல்துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, திருச்சி மாநகர காவல் அதிகாரிகளுக்கு ரூ.9,00,000 செலவில் 30 டேப்லெட் (Tablets) சாதனங்களை, மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, 10 காவல் நிலையங்களுக்கு 30 கையடக்க கணினிகளை (Tablets) வழங்கினார்.
இதுகுறித்து காவல் ஆணையர் சத்திய பிரியா பேசுகையில், "காவல் நிலையத்தின் நீதிமன்ற பணி, அழைப்பாணை (Summon), பிடியாணை (Warrant), மருத்துவமனை பணி, புகார் மனு, காவல் விசாரணை சரிபார்ப்புப் பணிகள் தொடர்பான பணிகளை அன்றாடம் பதிவு செய்து, தினசரி ஆணையிடவும், கையடக்க கணினியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ரோந்து பணியில் சந்தேக நபர்களை விசாரணை செய்தல், சந்தேக வாகனங்களை பரிசோதனை செய்தல், மூத்த குடிமக்கள் வீடுகளை சரிபார்த்தல் போன்ற பணிகளையும் கண்காணிக்க வசதி உள்ளது. இக்கருவியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசகங்களை படிக்கவும், டைப் செய்யும் சிறப்பம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் போலீஸாரின் தகவல் பரிமாற்றத்தில் தொய்வு இருக்கக்கூடாது" என சத்திய பிரியா பேசினார். இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“