/tamil-ie/media/media_files/uploads/2023/07/senthil-balaji-chennai-hc-1.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலை வாய்ப்பு மோசடி வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
அன்றைய தினமே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனால் செந்தில் பாலாஜியிடம் இதுவரை அமலாக்கத் துறையால் விசாரணை நடத்தமுடியவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இதனால் 3ஆவது நீதிபதியிடம் இந்த மனு சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், “இந்த மனு விசாரிக்கதக்கதல்ல என உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் இளங்கோ, “தொடக்கம் முதலே அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதமானது.
சட்டவிரோதக் கைது என்பதால், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கியதும் சட்டவிரோதமானது செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையிலிருந்த காலத்தை நிச்சயமாக அமலாக்கத்துறையின் காவல் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்” என்று தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என 3வது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் வழக்கில் மீண்டும் வாதம் நடக்குமா என திமுக வழக்கறிஞர் இளங்கோவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கு வாய்ப்பில்லை. பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகள் உத்தரவாக கருதப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.