தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் கொண்டு வருவதற்கான மசோதாவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். இந்நிலையில் மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன.
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது.
இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உதயமாகின்றன.
மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில், மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“