நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 3) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை மேல் அங்கி அணிவிக்கும் விழா மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரம், தென்காசி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். கிராம புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் பாம்பு, நாய் கடி சிகிச்சைக்கான மருந்து கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "தமிழகம் முழுவதும் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் இரண்டு நீலகிரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 600 படுக்கைகள் கொண்ட ஊட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிவடையும். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார்" என்றார்.
மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் மாறுபாடு பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“