ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானம் நேற்று அதிகாலை வந்தது. அவ்விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத் துறையின் வருவாய் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விமானத்தில் வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 11 பயணிகளை சோதனை செய்ததில் அவர்களது பைகளில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடல், காலணி, ஜீன்ஸ் பேண்டுகளில் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 6.62 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு காவல் துறையினர் திருச்சி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை கைது செய்தனர். மீதமுள்ள 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3.8 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“