18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்காமல் ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாதாடினார்.
முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை நவம்பர் 20 அன்று, அதாவது இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
விசாரணைக்கு வரும் 7 வழக்குகள்:
1. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அந்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு
2. பேரவைக்குள் குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததற்காக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
3. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடகோரி திமுக தொடர்ந்த வழக்கு
4. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு
5. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி தொடர்ந்த வழக்கு
6. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு
7. ஓ.பன்னீர் செல்வத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு