ஃபீஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டுமலை அடிவாரத்தில் இருந்த வ.உ.சி நகர் பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுமார் 40 டன் எடை கொண்ட பெரும் பாறை ஒன்று சரிந்து வந்து அபாயகரமான வகையில் நின்றுள்ளது.
3 வீடுகள் மீது மண் சரிவு ஏற்பட்ட நிலையில் ராஜ்குமார் என்பவரின் வீடு மீது அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டு வீடு முழுவதுமாக மண்ணில் புதைந்தது. இதில் 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் உள்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர். ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
மண் சரிவு ஏற்பட்ட போது ராஜ்குமார் வீட்டருகே இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அவரது வீட்டு கதவை அடைத்துக் கொண்டுள்ளது. இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர். மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமாரின் செல்போன் சுமார் ஒரு மணி நேரம் வரை இணைப்பில் இருந்துள்ளது. அதன்பின் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
ஆனால், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், அரக்கோணத்தில் இருந்து ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக், ஹிட்டாச்சி வாகனங்கள் உள்ளிட்டவையும் வரவழைக்கப்பட்டன. எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இரவிலும் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இதன் பின் திங்கட்கிழமை அதிகாலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர்.
தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் மீட்பு பணிகள் நடைபெற்றது. மாலை வரை நடைபெற்ற மீட்பு பணியில் 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
உடல்கள் மீட்கப்படுவதிலும் கூட சிக்கல் ஏற்பட்டது. மழையால் மண், பாறைகள் இறுகி இருந்தன. மேலும் அங்கு மண் சரிவு ஏற்படாத வகையில் மீட்பு படையினர் கவனமாக இருந்து உடல்களை மீட்டனர். திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.