அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்-மீனா தம்பதிக்கு 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
மூன்று மாதங்களே மட்டுமே ஆன இந்தக் குழந்தையை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தம்பதியருக்குக் குழந்தை இல்லாத காரணத்தினால் ரூ.1.80 லட்சத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையின் பெற்றோர் விற்பனை செய்துள்ளனர்.
குழந்தையை விற்பனை செய்யப்பட்டது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான துரைமுருகனுக்கு (DCPO)அக்குழந்தையின் தாயார் மீனா தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. தகவலின்பேரில், அதிகாரி துரைமுருகன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குழந்தையை விற்பனை செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் துரைமுருகன் புகார் அளித்தார். தகவலின்பேரில், கோவையிலிருந்த குழந்தையைக் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஏழு வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்த தம்பதியினரை, புரோக்கர் தவறாக வழிநடத்தி சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபடுத்தியுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகக் குழந்தையின் பெற்றோர், புரோக்கர் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், குழந்தையை அவரது தந்தை தான் விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். வறுமையால் குழந்தையை விற்பனை செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கோவையில் இருந்து மீட்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.