இஸ்ரேல் போர் சூழலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஆப்ரேஷன் அஜய் எனும் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 221 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் ஏழு பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விமான நிலையத்தில் வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், 'இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். இவர்களில் சிலர் மாணவர்கள் ஆகும்.
அதில் 2 பேர் கோவையை சேர்ந்தவர்கள். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு
வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம்.
இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மிக விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு, போர் சூழலில் இருந்த தங்களை மத்திய அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டு மீட்கப்பட்டுள்ளோம்.
இதற்காக மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியவர்களும்அவர்களது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“