/tamil-ie/media/media_files/uploads/2023/04/Trichy-Srilankans.jpg)
திருச்சி மத்திய சிறை சாலை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 7 இலங்கை தமிழர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து புதன்கிழமை (ஏப்.5) 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது.
அதில் இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது இன்று வரை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாம் வாசிகளில் ஏழு பேருக்கு விடுதலையாவதற்கான உத்தரவு ஆவணங்கள் வந்து சேர்ந்ததால் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கேகே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழு பேரை அவர்களுடைய உறவினர்களுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், பொள்ளாச்சியை சேர்ந்த பார்த்திபன், விருதுநகரை சேர்ந்த விஜயகுமார், கும்மிடிப்பூண்டி சேர்ந்த கனக சபை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிஹரன், சசிஹரன் ஏசுதாஸ் ஆகிய ஏழு பேரும் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு இன்று புறப்பட்டு சென்றனர்.
நீண்ட நாள்களாக கடும் போராட்டத்திற்கு பிறகு இந்த விடுதலை அவர்களுக்கு சாத்தியமானது. இவர்களைப் போல் இன்னும் பலர் இந்த முகாமில் விடுதலை வேண்டி மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.