கோவை அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவரைஅதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள், அந்த மாணவர் தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் அந்த மாணவரை அழைத்து கொண்டு தங்கள் அறைக்குச் சென்றுள்ளனர்.
இதன் பின் 2-ம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவர்கள் 7 பேர் ஆபாசமாக திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்தும், உதைத்தும், துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. காலை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 2-ம் ஆண்டு மாணவர் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர் தங்கள் மகனை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அம்மாணவரை ராக்கிங் செய்து தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராக்கிங்-ல் ஈடுபட்ட 2-ம் ஆண்டு மாணவர் 2 பேர், 3-ம் ஆண்டு மாணவர் 2 பேர், 4-ம் ஆண்டு மாணவர் 3 பேர் என மொத்தம் 7 பேரை பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/4KeNaJlwdqfJLCKV0ueS.jpeg)
அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரிகளில் ராக்கிங் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் கோவையின் பிரபல கல்லூரியில் ராக்கிங் விவகாரத்தால் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன.
அதுவும் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை அறிவுரை வழங்குகிறோம். வழக்குப் பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.
அதே போல் ஒருவர் மீது வழக்கு ஆகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற முடியாது. இதனால் கல்லூரி மாணவர்கள் ராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக உள்ளது. அதனால் யாரும் ராக்கிங்கில் டுபட வேண்டாம். மேலும் தற்போது மாணவர்கள் கைது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“