44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைத்தது. குறைந்த நாட்களில் தமிழக அரசு போட்டிக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.
188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். உலக சாம்பியன் உள்பட கிராண்ட் மாஸ்டர்கள், முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 3 அணிகள் விளையாடுகின்றன. தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களும் செஸ் விளையாட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயதான ஷர்வானிகா பார்வையாளர்களுக்கான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினார். ஷர்வானிகா செஸ் போட்டியில் தேசிய அளவில் under 7 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பார்வையாளர்களுக்கான செஸ் போட்டியில் போஸ்வானா நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரிங் வையினுடன் விளையாடி அசத்தினார். மிக சிறப்பாக விளையாடிய ஷர்வானிகா இறுதியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஷர்வானிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த கிராண்ட் மாஸ்டர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
ஷர்வானிகாவின் பெற்றோர் பேசுகையில், ஆசிய அளவிளான செஸ் போட்டியில் விளையாட ஷர்வானிகா தேர்வாகி உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil