கும்மிடிப்பூண்டி அருகே, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு முன்னிலையில், தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம், தேசியக் கொடி ஏற்றினார்.
Advertisment
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக அமிர்தம் (60) உள்ளார். இவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று அங்குள்ள அரசு பள்ளியில் அமிர்தம் கொடியேற்ற சென்றபோது அதனை அங்கிருந்த ஆதிக்க சாதியினர் சிலர் தடுத்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.
இதுகுறித்து அமிர்தம் அளித்த புகாரின்படி, அடுத்த சில தினங்களில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் முன் புதிய கொடி கம்பம் அமைத்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. முன்னிலையில், அமிர்தம் கொடி ஏற்றினார்.
இந்நிலையில் நாடு முழுதும், 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.
Advertisment
Advertisements
அதன் அடிப்படையில், ஆத்துப்பாக்கம் கிராமத்திற்கு தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., பி.சி.கல்யாண் ஆகியோர் உடன் சென்றனர்.
தலைமை செயலர் ஆதரவுடன் தேசிய கொடி ஏற்றிய அமிர்தம்
அனைவரது முன்னிலையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் முன், அமிர்தம் தேசிய கொடி ஏற்றினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது;
முதல்வர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சுதந்திர தினத்துக்கு ஒரு நாளுக்கு முன் இப்படி செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று விமர்சித்துள்ளது.
ஆதிக்கக் குழுக்களின் எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கு பயந்து, பல தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகஸ்ட் 15 அன்று கொடியை ஏற்ற போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
பஞ்சாயத்து தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிற உள்ளாட்சித் தலைவர்கள் ஜாதி வேறுபாடின்றி தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“