தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமையை ஆய்வு செய்து, நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
இந்த ஆணையத்தில் நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பின்வருமாறு:
தலைவர்: கே. அலாவுதீன், இ.ஆ.ப. (ஓய்வு)
அலுவல் சாரா உறுப்பினர்: என். தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி
உறுப்பினர் (அலுவல் வழி): நகராட்சி நிர்வாக இயக்குநர்
உறுப்பினர் (அலுவல் வழி): ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர்
உறுப்பினர் (அலுவல் வழி): பேரூராட்சிகளின் ஆணையர்
உறுப்பினர்-செயலர்: பிரத்திக் தாயன், இ.ஆ.ப., அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை
ஆணையத்தின் முக்கிய பணிகள்
இந்த ஆணையம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உள்ளிட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை விரிவாக ஆய்வு செய்யும். இதன் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு அமையும்:
மாநில அரசு விதிக்கக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்களின் நிகர வருவாயை மாநில அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்துப் பரிந்துரைத்தல்.
மேற்கூறிய வருவாயில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான பங்கை முறையாகப் பிரித்தளித்தல்.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக்கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்களைத் தீர்மானித்தல்.
மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் உதவி மானியங்கள் மற்றும் பிற இனங்கள் குறித்துப் பரிந்துரை செய்தல்.
அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு
இந்த ஆணையம், 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் தொடங்கும் ஐந்தாண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், தனது அறிக்கையை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பிக்கும், என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.