பொறையார் பேருந்து பணிமனை விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அக்டோபர் 30 தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாளா்கள் ஓய்வு எடுக்கும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 1945 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20 ஆம் தேதியன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். மேலும் 2 போ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கிய போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில், வழக்கறிஞர் ஆர்.ஓய். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி முறையீடு ஒன்றை செய்தார். அதில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற பேருந்து பணிமனை விபத்து தொடர்பாக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விபத்துக்கு காரணமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடைபெற்ற நிகழ்வு எனவே இது தொடர்பாக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இது தொடர்பாக செய்திதாள்களில் வெளிவந்த செய்தியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து பணிமனைகளும் இதே நிலைதான் நீடிக்கின்றது எனவும் எனவே அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பொறையார் பணிமனை விபத்து தொடர்பாக இந்த நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதாக தெரிவித்தனர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், ‘இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உரிய சிகிச்சை அரசு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுதும் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை கட்டமைப்பு வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிமன்றம், பொறையார் பணிமனை விபத்து தொடர்பாக 1 வாரத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் பதில் அளிக்கவும் ஆணையிட்டது. நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.