/indian-express-tamil/media/media_files/gyEP2QzuQLnXQAWjPNtx.jpg)
திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பயணம் செய்யவுள்ளனர். இதனடிப்படையில் பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறுகிறது. 15-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு 12-ந்தேதி வியாழக்கிழமை முதல் 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பிவருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
பக்தர்களுக்கு எவ்விதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.