ராமேஸ்வரம், நெடுத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை இன்று (ஜூலை 23) கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 8 விசைப் படகுகள், 4 நாட்டுப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மேலும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று (23.07.2024) அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களையும் அவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“