தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியர்களில் 9 பேர் உயிரிழந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் நேற்று மாலை திடீரென்று காட்டுத்தீ பரவியது. இதனால், அந்த பகுதியில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுளா பயணிகள் பலர் தீயில் மாட்டிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகின்றனர்.
தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற மீட்புக் குழுவினருடன், அப்பகுதி கிராம மக்களும் இணைந்தனர். மேலும், ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், குரங்கணி வன பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றது. இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளதாகவும், தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மட்டும் கவலைகிடமாக உள்ளதாகவும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் காட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் 5 -பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விபத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 13 பேர் ஒரு குழுவினராகவும், சென்னையிலிருந்து வந்திருந்த 27 பேர் மற்றொரு குழுவினர் அங்கம் வகித்தனர். இதில் 27 பேர் வரை, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.