/indian-express-tamil/media/media_files/2025/08/29/supreme-court-2025-08-29-08-46-56.jpg)
'ஒப்பந்த செவிலியர்களை சுரண்டுகிறது தமிழ்நாடு அரசு' - உச்சநீதிமன்றம் விமர்சனம்
இலவசங்கள் கொடுக்கப் பணம் இருக்கும் தமிழக அரசிடம், ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கும் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், விளக்கமளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, மத்திய அரசிடமிருந்து உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளதாக வாதிட்டது. அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என தெரிவித்தது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என குறிப்பிட்ட நீதிமன்றம், அதை எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது என தெரிவித்தது.
நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியது. எனினும் இந்த விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு MRB செவிலியர் அதிகாரமளிப்பு சங்கம் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.