கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் நேரு (55). இவர் எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாவின் கணவர் ஆவார். இவர் தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் சேகரிக்க இன்று காலை 8 மணி அளவில் நாகிநத்தம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மனைவி சரண்யா (25), பாலாஜி மனைவி கல்பனா (25) ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரண்யா, கல்பனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்றபோது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சம்பவ இடத்டில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு சாலை நடுவே பொதுமக்கள் கடக்காமல் பேரிகார்டு போட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்