சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புகார் தொடர்பாக வெளியான காணொலிகள் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர் செல்வ குமார் என்பவர் சென்னை மாநகர மேயர் பிரியா மீது ஆன்லைன் மூலமாக இந்தப் புகாரை தாக்கல் செய்துள்ளார்.
அந்தப் புகாரில், “காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் ஆகியோர் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணித்தனர்.
இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் 93-வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செல்வ குமார் தனது புகாரில், “சாதாரண பொதுமக்கள் இவ்வாறு பயணித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற செயலை யார் செய்தாலும் அது குற்றம்தான். ஆகவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேயர் பிரியா காரில் தொங்கியப்படி பயணித்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/