/indian-express-tamil/media/media_files/2025/04/20/Z25RqS4GRCaW1hd4TWQ4.jpg)
தி.மு.க. ஆட்சிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாள்; அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகி ஆவேச பேச்சு
நீட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் இதுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் எனக்கூறி உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணியின் சார்பில் மாநில மாணவரணி துணைச்செயலாளர் K.செந்தில்குமார் ஏற்பாட்டில், மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி மற்றும் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நீட் விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டால் இதுவரை 22 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர் என்றார்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்றக்கூடிய அரசாக மாணவ-மாணவிகளிலிருந்து, இளைஞர்கள், குடும்பத் தலைவிகளிலிருந்து அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைக்கும் அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எப்படி உயிரை மாய்த்துக் கொண்ட இந்த மாணவச் செல்வங்களுக்கு கண்ணீர் அஞ்சலி நடத்துகிறோமோ? அப்படியே தி.மு.க. ஆட்சிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தனக்குத் தெரியும்' என தொடர்ந்து பொய் பேசிவரும் உதயநிதி ஸ்டாலினை போல் நம் வீட்டுப் பிள்ளை பேசியிருந்தால், "கையில் குச்சியை எடுத்து இப்படி பொய் பேசுவியா, பேசுவியா என முழங்காலில் போட்டிருப்போம்" ஆனால் உதயநிதியை யாரும் இப்படி செய்யவில்லை என ஆவேசமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து அ.தி.மு.க-வினர் விசிலடித்து உற்சாகமாக கரகோசங்கள் எழுப்பினர். அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.