/indian-express-tamil/media/media_files/40en3kIWR6ddmSSrtQL2.jpg)
கோவையில் 5ஆம் வகுப்பு சிறுமியை கடித்த நாயின் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்போவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறினார்.
கோவை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அப்பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அவர் நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தப்பி ஓடியுள்ளார். அதற்குள் தவறி சிறுமி கீழே விழுந்து விட சிறுமியின் மீது பாய்ந்த நாய் அவரின் கழுத்து,தோள்பட்டை காது என ஐந்து இடங்களில் கடித்து குதறியது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை மோகன் குமார் தகவலாக கூறுகையில், “கடந்த 2022ஆம் ஆண்டு எனது மகளை இதே நாய் கையில் கடித்தது. அப்போது நாயின் உரிமையாளரிடம் நாயை கட்டி வைக்குமாறு கூறியும் அவர்கள் கட்டி வைக்கவில்லை.
சாலையில் செல்வோரை நாய் அடிக்கடி துரத்தி வருகிறது. தற்போது மீண்டும் தனது மகளை இரண்டாவது முறையாக கடித்துள்ளது. ஆனால் நாயின் உரிமையாளர் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்” என்றார்.
இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள மோகன்குமார் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐந்து வயது குழந்தை மற்றும் அவரது தாயை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவையில் 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.