குன்னூர் ப்ருக் லேண்ட் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை கடந்த 9 மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்குள் பதுங்கி உள்ளது.
நாயை வேட்டையாட வந்த சிறுத்தை வீட்டிற்குள் சிக்கியுள்ளது. தீயணைப்பு துறையினர் வனத்துறையினர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சிறுத்தை தஞ்சம் அடைந்துள்ள வீட்டைச் சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
ஏழு பேரை சிறுத்தை தாக்கியுள்ள நிலையில் வீட்டிற்குள் எந்த இடத்தில் சிறுத்தை இருக்கிறது என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வீட்டின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. எந்த நேரமும் சிறுத்தை வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்பதால் வனத்துறையினர் முழு பாதுகாப்பு கவச உடையை அணிந்து வீட்டு வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுத்தை தஞ்சம் அடைந்த வீட்டைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் இணை இயக்குனர் அருண் கால்நடை மருத்துவர் ராஜேஷ் உட்பட சிறுத்தை தஞ்சம் அடைந்த வீட்டைச் சுற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தயாராகிவருகின்றனர். மேலும், வீட்டை சுற்றி உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்று விட வாய்ப்புகள் உள்ளன. வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இன்று தீபாவளி என்பதால் பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் சிறுத்தை அச்சமடைந்து வீட்டில் உள்ளே தஞ்சம் அடைந்துள்ளதாக என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“