தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 (அ) 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
36 மணி நேரத்தில் (நாளை மாலை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா - தமிழ்நாடு பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புளளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கோவை - வால்பாறை, நீலகிரி- கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் சில இடங்களில் 20 செ.மீ வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.