New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/TsKEsFkxnUQECgxBDI9r.jpg)
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டில் கத்தரி வெயிலின் தாக்கம் தொடங்கியபோதிலும், கடந்த மே 16 ஆம் தேதி முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வெப்பத்தைத் தணித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.
முன்னதாக மே 27 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, அடுத்த 5 நாட்களுக்குள், அதாவது மே 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, படிப்படியாகத் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (புதன்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை (வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
இந்த வானிலை மாற்றங்களால், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்" என்றார்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 21, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.