/indian-express-tamil/media/media_files/2025/08/21/vijay-short-story-2025-08-21-18-32-54.jpg)
'நீங்கதான் ராஜா, யார் அந்த தளபதி?'... த.வெ.க. மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டிற்குப் பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், த.வெ.க. வின் 2-வது மாநில மாநாடு மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், தனது வழக்கமான பாணியில் ஒரு குட்டிக் கதை கூறினார்.
விஜய் சொன்ன குட்டிக் கதை:
"ஒரு நாட்டில், ராஜா ஒருவருக்குத் தளபதி தேவைப்பட்டது. பத்து தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் வேகவைத்த நெல்லைக் கொடுத்து, அதைப் பயிரிட்டு 3 மாதங்களில் கொண்டு வரச் சொன்னார். 3 மாதங்களுக்குப் பிறகு, 9 பேர் நன்கு வளர்ந்த நெல் பயிரைக் கொண்டு வந்தனர். ஆனால், ஒருவரோ வெறும் தொட்டியைக் கொண்டு வந்தார்.
ராஜா, அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்க, "நான் எவ்வளவு முயற்சி செய்தும், தண்ணீர் ஊற்றியும், உரம் இட்டும் அது வளரவே இல்லை" என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இதைக்கேட்ட ராஜா, அந்த ஒருவரை மட்டுமே தனது தளபதியாகத் தேர்வு செய்தார்.
ஏனெனில், ராஜா கொடுத்தது வேகவைத்த நெல்; அது ஒருபோதும் முளைக்காது. மற்ற ஒன்பது பேரும் ராஜாவையும் மக்களையும் ஏமாற்றி, வேறு விதையைப் பயிரிட்டுக்கொண்டு வந்திருந்தனர். ஆனால், நேர்மையாக உண்மையைப் பேசிய அந்த ஒருவர்தான் ராஜாவின் நம்பிக்கைக்கும், திறமைக்கும் உரியவராக இருந்தார்."
கதையைச் சொல்லி முடித்த விஜய், "ஒரு நாட்டுக்குத் திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு நேர்மையும் உண்மையும் முக்கியம். இப்போது நீங்கள் எல்லோரும் தான் ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த தளபதி யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் குட்டிக் கதையின் மூலம், அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட விஜய், நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.